மாகாண அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குரியதா? அல்லது ஆளுநருக்குரியதா? - உச்சமன்றே தீர்மானிக்க வேண்டும் - News View

About Us

Add+Banner

Sunday, July 1, 2018

demo-image

மாகாண அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குரியதா? அல்லது ஆளுநருக்குரியதா? - உச்சமன்றே தீர்மானிக்க வேண்டும்

Wigneswaran
மாகாண சபை அமைச்சர் ஒருவரை நியமிப்பது மற்றும் பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியதா அல்லது ஆளுநருக்குரியதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதி மன்றத்துக்கே இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு பற்றிய அர்த்த விளம்பலை வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அன்றி உச்ச நீதி மன்றத்துக்கே உள்ளது. நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடைக்கட்டளையை பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் விளக்கமளித்துள்ளார்.

ஊடகங்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என வாராந்தம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கும் கேள்வி பதிலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. டெனீஸ்வரன் பதிந்த வழக்கின் தீர்ப்புப் பற்றியே இம்முறை விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அதாவது அரசியல் யாப்பின் உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவரை ஒரு மாகாண சபையின் முதலமைச்சருக்கு பதவி நீக்கம் செய்ய முடியுமா அல்லது அவ்வுரித்து அவரின் தற்துணிபுக்கு அமைய ஆளுநர் வசம் கையளிக்கப்பட்டுள்ளதா? என்பதே இந்த வழக்கின் கேள்வியாகும்.

வழக்கு வட மாகாண சபை முதலமைச்சரை 1ம் எதிர்வாதியாகவும் 2ம்,3ம்,4ம்,5ம் எதிர்வாதிகளாகத் தற்போதைய அமைச்சர்களையும் ஆறாவது எதிர்வாதியாக முன்னைய சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கத்தையும் ஏழாவது எதிர்வாதியாக வட மாகாண ஆளுநரையும் குறிப்பிட்டு அவரின் வழக்கு பதியப்பட்டது. முன்னைய மூன்று அமைச்சர்களும் எதிர்வாதிகள் ஆக்கப்படாது வைத்தியர் சத்தியலிங்கம் மட்டுமே எதிர்வாதி ஆக்கப்பட்டிருந்தார்.

1ம் எதிர்வாதியாகிய முதலமைச்சர் சார்பில் தெரிபட்ட சட்டத்தரணிகளால் மூன்று பூர்வாங்க ஆட்சேபணைகள் எடுக்கப்பட்டிருந்தன. அவையாவன ஒன்று,

அரசியல் யாப்பின் படி உறுப்புரை 154 F (5) பற்றிய அர்த்தம் விளம்பலானது உறுப்புரை 125ன் படி உச்ச நீதி மன்றத்தினாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது. இரண்டாவதாக விண்ணப்பத்துடன் பதியப்பட்ட சான்றாவணங்கள் அனைத்தும் (இரண்டைத் தவிர) முதலாவணங்களாக அமையாதிருந்தமை 1990ம் ஆண்டு வெளிவந்த மேன்முறையீட்டு நீதிமன்ற (மேன்முறையீடு நடவடிக்கை சம்பந்தமான) விதிகளில் காணப்படும் 3(1) விதியின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமைந்துள்ளமை.

மூன்றாவதாக வழக்கின் விடய வஸ்துவுக்கு தேவைப்படாத முன்னைய அமைச்சருள் ஒருவரை 6ம் எதிர்வாதியாக உள்நுழைத்தமை சட்டத்திற்குப் புறம்பானது. வழக்கிற்கு அத்தியாவசியமான கட்சிக்காரராக சட்டம் ஏற்கும் நபர்களுள் 6ம் எதிர்வாதி அடங்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றைப் பரிசீலிக்கப் புகுந்த மேன்முறையீட்டு நீதி மன்றம் பூர்வாங்க விசாரணையின் இறுதியில் சில இடைக்காலக் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளதாக அறியப்படுகிறது.

முதலாவது பூர்வாங்க ஆட்சேபனைக்குப் பதில் இறுத்த பின்னர் தான் இக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டனவோ நாம் அறியோம். மேன்முறையீட்டு நீதி மன்றத்துக்கு இவ் வழக்கைக் கேட்க உரித்தில்லை என்றால் இடைக்காலத் தடைக்கட்டளை பிறப்பிக்கவும் உரித்தில்லை என்றாகிறது. 

ஆகவே முதலாவது பூர்வாங்க ஆட்சேபனைக்கு தமக்கு உரித்து இருக்கின்றது என்று விடையளித்த பின்பே இடைக்காலத் தடைக்கட்டளையைப் பிறப்பிக்க முடியும். அவை பற்றி முழுமையாக அறிய மேன்முறையீட்டு நீதி மன்றத்தின் தீர்மானத்தின் பிரதி பெற வேண்டும். இதுவரையில் அது பெறப்படவில்லை. பிரதி பெற்ற பின்னரே மன்றின் தீர்மானம் பற்றிக் கூறலாம்.

மூன்றாவது இவ் வழக்கின் முக்கிய விடய வஸ்துவுக்கு தொடர்பில்லாத முன்னைநாள் சுகாதார அமைச்சரை இவ் வழக்கில் உள்ளடக்கியமை ஒரு குறிப்பிட்ட சட்டத்தரணி அவர் சார்பில் உள்நுழைய வழி அமைத்துக் கொடுப்பதற்கே என்றுங் கூறலாம். ஆகவே 6ம் எதிர்வாதியின் பெயரை உள்நுழைத்தமை தவறு என்று கூறி அவரின் பெயரை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நீதி மன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் போது அந்த ஆட்சேபனைக்கு விடையளிக்காமல் தமக்கு அந்தஸ்து இருப்பது போல் இடைக்காலத் தடைக்கட்டளையை பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு வேளை தமக்கு உரித்துண்டு என்று தீர்மானம் எடுத்த பின்னரே இந்தத் தடைக்கட்டளை வழங்கப்பட்டதோ நாம் அறியோம். ஆகவேதான் தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாது இருக்கின்றது அந்தப் பதிலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *