காத்தான்குடியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மத குரு ஒருவர் கடந்த சில தினங்களாக வீடுகளில் பண வசூலில் ஈடுபட்டு வருவது குறித்து விசாரணை நடாத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி காத்தான்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காத்தான்குடியில் கடந்த சில தினங்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மத குரு உட்பட மூன்று பேர் வீடுகளில் பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதரவற்றவர்களை பராமரிப்பதற்காக இந்த நன்கொடை பெறுவதாக கூறியே இவர்கள் இந்த பண வசூலிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கான பற்றச் சீட்டு ஒன்றையும் இந்த மதகுரு வழங்கியுள்ளார். இந்த பண வசூலிப்பில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சமூக செயற்பாட்டாளரும் வர்த்தகருமான பிலால் கலீல் ஹாஜியார் மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு புதன்கிழமை (6.6.2018) மாலை கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இந்த நடவடிக்கை தொடர்பில் குறித்த மத குருவை விசாரணை செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி காத்தான்;குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மத குரு வட மத்திய மாகாணத்தில் நடாத்தி வந்த ஆதரவற்றோருக்கான சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்கள் மூடப்பட்டு விட்டதாகவும் இவர் பொய்யைக் கூறி பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்ததையடுத்தே இதனை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கலீல் ஹாஜியார் தெரிவித்தார்.
குறித்த மத குரு வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் காத்தான்குடியிலுள்ள பல வீடுகளுக்கும் கடந்த சில தினங்களாக முச்சக்கர வண்டியொன்றில் சென்று வீடு வீடாக பண வசூலில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தகது.
எம்.எஸ்.எம். நூர்தீன்
காத்தான்குடி

No comments:
Post a Comment