சவுதி அரேபியாவில் திரையரங்கத்தை திறந்தது மற்றும் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்த நடவடிக்கைக்காக பட்டத்து இளவரசர் பின் சல்மானுக்கு அல் கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். வரலாற்றில் முதன் முறையாக திரையரங்கத்தை திறந்து வைத்து சவுதியில் அதிகளவில் பொழுதுபோக்கு நிகழ்சிகளை நடத்த வழிவகை செய்தார்.
பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை நீக்கி சவுதி பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினார். இந்த திட்டங்கள் எல்லாம் பாவகரமான திட்டங்கள் எனக் கூறியுள்ள அல் கொய்தா இயக்கம் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
‘முகமது பின் சல்மான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்கு பதிலாக, காரணமே இல்லாமல் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நாத்திகம் மற்றும் மதச்சார்பற்றவர்களை பின்தொடர்வதால், சவுதியில் ஊழல் மற்றும் அறத்தை சிதைக்கும் போக்கு அதிகரித்துள்ளது’ என அல் கொய்தா அமைப்பின் செய்தி நிறுவனமான மதாத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘கடந்த ஏப்ரல் மாதம் புனித நகரமான மக்காவுக்கு அருகில் உள்ள ஜெட்டா நகரில் ராயல் ரம்பல் (WWE) எனப்படும் மல்யுத்த போட்டிகள் நடந்தது. இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் மல்யுத்த வீரர்கள் திறந்த உடலுடன் இருந்தது கடும் கண்டனத்துக்குரியது’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment