ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்பட்டதாக அண்மையில் வெளியான நியூ யோர்க் டைம்ஸ்ஸின் செய்தியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) மறுத்தார்.
தாஜ் சமுத்ராவில் நேற்று நடைபெற்ற சமன் கெலேகம ஞாபகார்த்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
"இவ்விடயத்துக்காக நாம் எவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டோம் என்பது தொடர்பில் நிறைய எழுதப்பட்டுள்ளபோதும், இதில் எமது தேவைகள் நிறைவேற்றப்பட்டருப்பதாகவே நான் எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். இப் பேச்சுவார்த்தைக்கு நான் பொறுப்பாக இருந்தபோது, அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் என்னுடன் இருந்தார்.
நாம் சீனப் பிரதமர் லீ மற்றும் ஜனாதிபதி ஷீ ஆகியோருடன் கலந்துரையாடினோம். இது மிகவும் கடுமையானதொரு ஒப்பந்தம். என்றபோதும் இருதரப்புமே இதில் ஏதோவொரு பயனையடையக்கூடிய வகையிலான இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்துள்ளது " என்றும் பிரதமர் கூறினார்.
அத்துடன் இதன்மூலம் கிடைக்கும் பயன்களை நேரில் பார்வையிடுவதற்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றமைக்காக சீன ஜனாதிபதி ஷீ, பிரதமர் லீ, இலங்கை குழு உள்ளிட்ட பலருக்கு நன்றிகளையும் பிரதமர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொண்டார்.
நாம் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது இங்கிருந்த மிகப்பெரிய நீச்சல்தடாகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் விளங்கியது. எனினும் அடுத்த வருடம் முதல் இதற்குள் கப்பல் வந்து செல்வதைக் காணமுடியும். வெள்ளை யானைகளை நாம் பச்சையாக மாற்றி வருகின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
"ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சுற்றி கைத்தொழில் வலயம் நிர்மாணிப்பதற்காக சீனர்களுக்கு காணி குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதா என பிரதமரிடம் இச்சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் பதிலளிக்கையில், "சைனா மேர்ச்சண்ட்ஸ் தொண்டு செய்வதற்காக துறைமுகத்தை பெற்றுக் கொள்ளவில்லை.
வியாபார நோக்கிலேயே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்தாபிக்கப்படும் 15 கைத்தொழில்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கைத்தொழில் பேட்டையாக மாற்றும். இது நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள பல கைத்தொழில் பேட்டைகளில் ஒன்றாகும். நாம் கடன் பெறும் நோக்கில் கைத்தொழில் வலயங்களை நிறுவவில்லை.
அத்திட்டங்கள் கடனை நிலையான வைப்புக்களாக மாற்றம் செய்யும். ஏற்றுமதி மற்றும் கையிருப்புக்களை அதிகரிப்பதற்கு இந்நடைமுறையினையே நாம் ஊக்குவிக்க வேண்டும்" என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் துறைமுகத்துக்கு வருவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல கேள்விகளுக்கு பிரதமர், " இக்கப்பல்கள் எக்காரணம் கொண்டும் யுத்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியாது என நாம் அவர்களுக்கு கூறியுள்ளோம். அதற்கு அவர்களும் இணங்கியுள்ளார்கள்" என்று பதிலளித்தார்.
இந்நிகழ்வில் பிரதமர்' மோதல்களுக்குப் பின்னரான அபிவிருத்தியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்களை முகாமைத்துவம் செய்தல்-இலங்கையின் பாடங்கள்' எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment