கடந்த 04.06.2018ம் திகதி வாழைச்சேனையில் அமைந்துள்ள தெளஹீத் பள்ளிவாயலொன்று தாக்கப்பட்டு பலர் துன்புறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கள ஆய்வு செய்ய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழுவினர் 06.06.2018ம்திகதி விஜயமொன்றை மேற்கொண்டு கல்குடா பிரதேசத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இது தொடர்பாக வெளிவந்த செய்தியில் இத்தாக்குதலுக்கும் தப்லீக் ஜமாஅத்தினருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்ற தலைப்பில் செய்தி பிரசுரமாகியிருந்தது.
இத்தலைப்பு உண்மைக்குப் புறம்பானதாகும். ஏனெனில், இத்தாக்குதலில் தப்லீக் ஜமாஅத் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லையாயினும், அதில் ஈடுபடும் சில உலமாக்களாலும் தப்லீக் தவ்வத் பணியில் ஈடுபடும் பொது மக்களாலுமே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு களத்தில் எடுக்கப்பட்ட வீடியோப்பதிவுகளும் புகைப்படங்களும் சிறந்த சாட்சியங்களாகும்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட 23 பேருக்கெதிராக பள்ளிவாயல் நிருவாகம் வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 12 பேர் தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபடுபவர்களாகும். அவர்களும் ஏழு பேர் தப்லீக் பணியில் வெறி கொண்டு அலையும் உலமாக்களாகும் மற்றவர்களே தப்லீக் பணி ஈடுபாடில்லாத சாதாரண பொது மக்களாகும்.
இது இவ்வாறிருக்க, இத்தாக்குதலுக்கும் தப்லீக் ஜமாஅதுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லையென செய்தி வெளியிடுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.
வேண்டுமென்றால், தப்லீக் நிருவாகம் இதனை வழி நடாத்தவில்லை. அனுமதி வழங்கவுமில்லையெனக்கூறலாம். ஆனால், தப்லீக் பணியில் ஈடுபடுவோருக்கும் இதில் சம்பந்தமில்லை எனக்கூறுவது பெரும் அபத்தமாகும். தேவையேற்படின் இத்தாக்குதலில் ஈடுபட்ட தப்லீக் உலமாக்கள் மற்றும் கார்கூன்களின் விபரங்களை புகைப்படங்களுடன் எம்மால் சமர்ப்பிக்க முடியுமென கல்குடா தெளஹீத் ஜமாஅத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.ரீ.எம்.பாரிஸ்

No comments:
Post a Comment