காத்தான்குடி கடற்கரை வீதியைச் சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியை ஜனாபா மர்யம் முஸ்தபா நேற்று (29.6.2018) வெள்ளிக்கிழமை முதல் தனது ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
42 வருட ஆசிரிய சேவையில் காத்தான்குடியிலுள்ள பல ஆசிரியர்களையும் கல்வியலாளர்களையும் பட்டதாரிகளையும் உருவாக்கிய ஜனாபா மர்யம் முஸ்தபா தனது ஆசிரியப் பணியை சிறப்பாக செய்து முடித்து ஓய்வு பெற்றுள்ளார்.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும் காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களின் துனைவியாரான ஜனாபா மர்யம் முஸ்தபா 12.05.1977ல் ஆசிரிய சேவையில் இணைந்தார்.
காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலயத்தில் ஆரம்ப நியமனம் பெற்ற இவர் அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சியை பூர்த்தி செய்தார்.
தோப்பூர் அல்-தாஜ் மகா வித்தியாலயம், ஓட்டமாவடி பாலிகா மகா வித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம், காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயம், காத்தான்குடி அன்வர் வித்தியாலயம் என்பவற்றில் ஆசிரியையாக பணியாற்றி இறுதியாக காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது கல்விச் சேவை காலத்தில் 2006 தொடக்கம் 2008 வரை காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும், 2009 தொடக்கம் 2012 வரை காத்தான்குடி அன்வர் வித்யாலயத்தில் அதிபராகவும் இருந்து சேவையாற்றியுள்ளார்.
இவரது காலத்திலேயே முதல் தடவையாக அன்வர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்தார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
இவரது ஆசிரிய சேவைக்காலத்தில் ஆசிரியையாக, பகுதித் தலைவராக, பிரதி அதிபராக, அதிபராக என 42 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
மர்யம் ஆசிரியை மாணவர்களுக்கு வழங்கிய மிகச் சிறப்பான பொறுப்புடனான கல்விச் சேவையின் பயனாக அவரது மகன் முகம்மது முஸ்தபா மிப்றாஹ் நழீமியாக கல்வி கற்று இன்று காத்தான்குடியின் இளம் கல்வியலாளராக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
29..06.2018
No comments:
Post a Comment