முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு பிரதேசத்தில் காட்டு யானைகளால் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இப் பிரச்சினை தொடர்பில் பல்வேறு தடவைகள் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்கொண்டு வரப்பட்டும் தீர்வு கிடைக்காது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினார்கள்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் திகதி விஸ்வமடு அட்டைக்குளம் சுற்றுலாதளம் திறந்து வைக்க சென்ற முதலமைச்சரிடம் தமது குறைகளை நேரடியாக தெரிவித்தனர்.
இதன்போது, தமது ஊருக்குள் வருவது காட்டு யானைக்கள் அல்ல, இங்கு தென் பகுதியில் இருந்து கொண்டு வந்து விட்ட யானைகள். அவை கலைத்தாலும் செல்லாது, யானை வேலி அமைப்பதே அதற்க்கு தீர்வு எனவும் நிதியை நாம் மக்களிடம் பிச்சை எடுத்து என்றாலும் சேகரிக்கிறோம், இதற்கு வனவள பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் அனுமதியை பெற்று தருமாறு முதலமைச்சரிடம் மக்கள் கூறினார்கள்.
இதற்கு முதலமைச்சர் முடியுமான வரை இதனை செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றார்.
இந்நிலையில் இன்று (18) சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டத்தில் கலந்து கொள்ள கிளிநொச்சி சென்றிருந்த ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போது, அதற்க்கு தேவையான 5 மில்லியன் நிதியினை தருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி அந்த நிதியை நாளையே தருவதாகவும் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விரைவில் விஸ்வமடு மக்களுக்கு யானை வேலி அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவசீலன் - (முல்லைத்தீவு
No comments:
Post a Comment