தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம் - பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 1, 2018

தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம் - பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

தமிழ், முஸ்லிம் சமூகம் இணைந்து செயற்படுகின்ற தொழிற்பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலைப்பகுதியில் இயக்கவிருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களுடன் கடந்து வந்த தொலை தூர அரசியல் பயணத்தில் முதன் முதலாக இளைஞர்களான உங்கள் சார்ந்த குற்றச்சாட்டுகள், ஆதங்கங்கள் அனைத்திற்கும் பதிலளிக்கின்ற ஒரு திறந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் தொழில் ரீதியாக அரச மற்றும் தனியாரோடு இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலைப் பகுதியில் இயக்கவிருக்கின்றோம். தமிழ், முஸ்லிம் சமூகம் இணைந்து, தொழில் துறைகளை உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம். இந்த பணியில் உங்களையும் இணைத்து கௌரவப்படுத்துவோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணியினருக்கான கௌரவம் கட்சி, தலைமை மற்றும் என்னிடத்திலும் எப்போதும் பலமாக இருக்குமென்பதை நூற்றுக்கு நூறு வீதம் நம்புங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

கல்குடாவை ஒரு போதையற்ற பிரதேசமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். எமது சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்கின்ற எதிர்பார்ப்பு, எங்களிடமுள்ள அரசியல் என்கின்ற ஆயுதத்தை வைத்து எவ்வளவு தூரம் செய்ய முடியுமோ அப்பணியைச் செய்து தருவதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பரிமாணம் எவ்வாறிருந்தது என்றால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி தான், மாகாண சபை உறுப்பினராக இருந்தாலும் சரி தான் கல்குடாவுக்கு கிடைத்து விடக்கூடாதென்று தான் இருந்தார்கள்.

நான் 2004ம் ஆண்டு தேர்தலில் ஏறாவூரில் பசீர் சேகுதாவூத் கேட்கின்ற நிலவரம் வந்த போது, கல்குடாவில் மூன்று பேரை போட்டார்கள். மூன்றாக வாக்கு பிரியுமாக இருந்தால் பசீர்சேகுதாவூத் இலகுவாக வென்று விடுவார் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் கணிப்பு அவ்வாறிருந்தது.
கல்குடாவில் ஒட்டு மொத்தமாக இருந்து செயற்பட்டதிலும் கூட முதல் வேட்பாளராக வந்தும் கூட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக்கு இருபத்தையாயிரம் பேர் வாக்களித்தார்கள். 19600 பேர் மாத்திரம் எனக்கு வாக்களித்தார்கள். 5500 பேர் ஏறாவூரிலுள்ள பசீர்சேகுதாவூத்துக்கு வாக்களித்தார்.

அதனுடைய அர்த்தம் என்னவென்று சொன்னால் இந்த அடிப்படையிலே ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் பேர் கல்குடாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வரக்கூடாதென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அவர்களை இவ்வாறு வழிகாட்டியது.

எனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரை நீங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கின்ற பொறுப்பு என்னிடத்திலுள்ளது. அதே போன்று, மக்கள் காங்கிரஸின் தலைவரை அழைத்து கல்குடாப் பிரதேசத்தில் பாரியளவில் இளைஞர் மகாநாடொன்றை நடாத்த வேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன்.

கல்குடாப் பிரதேசத்தில் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்ற அணியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணி எதிர்காலத்திலும் இருக்குமென்பதை உறுதியாகச் சொல்கின்றேன்.

குறிப்பிட்ட கால கட்டத்தினுள் கல்குடாப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களின் பிரச்சனைகளைத் தீர்வு காண்பதற்கான முனைப்பின் ஆரம்பப்பணி தான் இந்தக்கூட்டம்.
தொழில்வாய்ப்பு, கல்வி உதவி, தொழில் வழிகாட்டல், தனிப்பட்ட விடயங்கள், கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் கை கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல்வாதியின் பொறுப்பு என்கின்ற விடயத்தில் இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம்.

எதிர்காலத்தில் அனைத்து வேலைத்திட்டங்களும் இளைஞர்களின் கையில் வழங்கப்பட்டு, நீங்களே அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் உங்களுக்கு அந்த ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம் என்றார்.

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தலைவர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.அமீர், எம்.எப்.ஜவ்பர், மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் கே.பி.எஸ்.ஹமீட், சட்டத்தரணி ஏ.எம்.றாசீக், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளைச்சேர்ந்த இருநூற்றி ஜம்பதுக்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களையும், திறந்த கேள்விகளையும் பகிர்ந்து கொண்டனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 
ஊடகவியலாளர்

No comments:

Post a Comment