இஸ்லாம் உணர்வுபூர்வமான மார்க்கமாகும். அதனை ஏற்றுக் கொண்டவர்களையும் உணர்வுடன் வாழ்வதற்கே அது வழிகாட்டுகின்றது. அல்லாஹ்வுடன் உறவைத் துண்டிக்காத நிலையில் வாழ்பவனையே உயர்ந்த மனிதனாக இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
தக்வா என்ற உணர்வே மனிதனைப் புனிதனாக்கவல்ல உணர்வாகும். அல்லாஹ் புனித ரமழானின் மூலம் இதனை மனித சமூகத்துக்கு கொடுத்து உணர்வுள்ள மனித சமுதாயத்தின் உருவாக்கத்தை எதிர்பார்க்கின்றான். அல்லாஹ்வுடன் உணர்வுபூர்வமான தொடர்பு வைத்துள்ள ஒருவரே உயர்ந்த மனிதன் என இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
அல்லாஹ் புனித ரமழானை தக்வா எனும் உணர்வைப் பலப்படுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்தித் தந்துள்ளதாக அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
இந்த ரமழானை சரியாகப் பயன்படுத்தியவர்களினால் மாத்திரமே தக்வா எனும் உயர்ந்த உணர்வை அடைந்துகொள்ளலாம் என அல்லாஹ் தெரிவித்துள்ளான். ரமழானை அடைந்த அனைவரும் தக்வாவை அடைந்து கொள்வதான உத்தரவாதத்தை அல்லாஹ் எங்கும் வழங்கவில்லை. ரமழானில் புரியப்படுகின்ற தனிப்பட்ட அமல்களும், சமூக செயற்பாடுகளும் உணர்வுபூர்வமாக அமையும்போதே அல்லாஹ் கூறிய தக்வாவை இந்த ரமழானில் அடைந்துகொள்ளலாம்.
இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கு எமது ஒவ்வொருவருடைய செயற்பாடுகளும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். வெறும் சடங்கு, சம்பிரதாயமாக அமையும் செயற்பாடுகளினால் அல்லாஹ் கூறிய இலக்கை அடைய முடியாது என்பது விளக்கம் தேவையில்லாத உண்மையாகும்.
ரமழானில் நாம் புரியும் செயற்பாடுகள் உணர்வுள்ளதாக அமைய வேண்டுமாக இருந்தால், அவை பழக்கதோசமாக அமைந்துவிடக் கூடாது. நிகழ்ச்சி நிரற்படுத்தப்பட்ட ஒரு இயந்திரமாக நாம் மாறிவிடக் கூடாது.
எல்லோரும் ஸஹருக்கு எழும்புகிறார்கள். வானொலியில் நிகழ்ச்சிகள் செல்கிறன. நாமும் எழும்புகிறோம். எல்லோரும் சுபஹ் தொழுகைக்காக பள்ளிக்குச் செல்கின்றார்கள். நாமும் செல்கின்றோம். எல்லோரும் அல்குர்ஆனை ஓதுகின்றார்கள். நாமும் ஓதுகின்றோம்…… இப்படியாக எமது செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் உணர்வற்ற சம்பிரதாயம் கலந்த செயற்பாடுகளாகவே எமது சகல நடவடிக்கைகளும் மாறிவிடும்.
நாம் எந்தக் கருமத்தை செய்யும்போதும், இதனை ஏன் செய்கின்றோம்? எப்படி செய்ய வேண்டும்? இதனால் என்ன பயன் கிடைக்கின்றது? நாம் அமுல்படுத்தும் முறைமையினால் உரிய பயன் கிடைக்கப் பெறுமா? இந்தப் பயனை கிடைக்காமல் செய்யும் விடயங்கள் எவை? அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வது எவ்வாறு….? என பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அப்பொழுதுதான் எமது செயலை உணர்வு பூர்வமான செயலாக மாற்றிக்கொள்ள முடிகின்றது.
நாம் நல்லமல்களை செய்துமுடிக்க வேண்டும் என்றே முயற்சிக்கின்றோம். அவற்றை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செய்து முடிக்கின்றோமா? என பார்க்கத் தவறுகின்றோம். அல்லாஹ் ஏற்றுக்கொள்ளும்படி செய்யும் செயல்களிலேயே தக்வா கிடைக்கப் பெறுகின்றது.
எம்மை அடைந்துள்ள ரமழான் மாதத்தில் புரியும் இபாதத்துக்களை நாம் உணர்வுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஸஹர் செய்யும் நடவடிக்கை, எமது நோன்பு, பகல் நேர செயற்பாடுகள், இப்தாருடைய நிகழ்வு, இரவுத் தொழுகை மற்றும் ஏனைய இபாதத்துக்கள், மனிதர்களுடனான உறவுகள், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள், எமது தொழில் நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக எம்மை விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொழுதுகள்…. போன்ற அனைத்து விடயங்களும் உணர்வு பூர்வமானதாக காணப்படுகின்றதா? என்பது குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
நாம் செய்யும் செயல்கள் அல்லாஹ் அனுமதித்ததா? அவற்றை இஸ்லாம் சொன்ன பிரகாரம் செய்கின்றோமா? நாம் செய்யும் பிரகாரம் செய்தால் அல்லாஹ்வின் அன்பு கிடைக்குமா...? என ஒவ்வொரு செயலையும் நாம் கவனமாகச் செய்யும் போதே அது உணர்வுபூர்வமானதாக மாறுகின்றது.
ரமழானில் புரிகின்ற தனிப்பட்ட வணக்க வழிபாடுகளும், சமூக இபாதத்துக்களும் இப்படித்தான் பார்க்கப்பட வேண்டும். நாம் எதனைச் செய்தாலும் இஹ்லாஸுடன் செய்வதும், இஸ்லாத்துக்கு முரணில்லாத விதத்தில் செய்வதும் பிரதானமானது.
உணவு தவிர்க்கப்படும் மாதம் என்று ரமழான் கூறப்பட்டாலும், இந்த மாதத்தில் தான் அதிகமாக உணவு வீண்விரயம் செய்யப்படுகின்றது. ரமழான் இரவு வணக்கத்திற்கான மாதம் என்று கூறப்பட்டாலும், அதிகமானோரினால் இரவின் புனிதம் கெடும் வித்த்தில் துஷ்பிரயோகம் செய்யும் நிகழ்வுகள் அதிகம் இந்த மாதத்தில் தான் இடம்பெறுகின்றன.
ரமழான், பாவங்கள் அதிகம் இடம்பெறாத மாதம் என்று கூறப்படுகின்றது. எமது சூழலில் நோன்பு நேரத்தைக் கழிப்பதற்கு வானொலியில் சினிமாப் பாடல் கேட்பது, தொலைக்காட்சியில் சினிமா, நாடகம், கார்ட்டூன் போன்றவற்றைப் பார்ப்பது என அதிகமான பாவமான விடயங்களில் ஈடுபடுவதும் இம்மாத்த்தில்தான்.
ரமழான் இஸ்திஃபார், தௌபாவின் மாதம் என்று கூறுகின்றோம். கிளிப்பிள்ளை போன்று தான் செய்த தவறை உணராதவர்கள் என்பதை இம்மாதத்திலேயே நாம் வெளிக்காட்டுகின்றோம். கோபம் வராத மாதம், பொறுமையின் மாதம் எனக் கூறுகின்றோம். பசிவந்தால் பத்தும் மறக்கும் என்ற கொள்கையை இம்மாத்த்தில் தான் நாம் வெளிப்படுத்துகின்றோம்.
தான தர்மத்துக்கான மாதம் என்று கூறுகின்றோம். கணக்கெடுத்துக் கொடுக்க வேண்டிய ஸக்காத்தை அதிக நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஸதகாவாக இம்மாதத்திலேயே பங்கீடு செய்கின்றோம். ரமழான், இராத் தொழுகையின் மாதம் என்று கூறுகின்றோம். தொழுகை தொடர்பில் அதிக சர்ச்சைகள் இம்மாதத்தில் தான் எழுகின்றன.
ரமழான், யுத்தம் செய்த மாதம் என்று பத்ரை ஞாபகப்படுத்துகின்றோம். ஆனால், பெரும்பாலானவர்கள் பசியுடன் அதிகமாக தூக்கத்தில் நாட்களை கடத்துவது இம்மாதத்திலாகும். ரமழான், ஏழையின் பசியை உணரும் மாதம் எனச் சொல்கின்றோம். பிச்சை கேட்டு அதிகமானோர் வெளிப்படுவதும் இம்மாதத்தில் தான்.
இப்படியாக நாம் செய்யும் செயல்கள் பற்றி உணர்வின்றி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாம் செய்யுமாறு கூறும் எந்தவொரு நடவடிக்கையும் பெறுமதியான விளைவுகளையே வெளிப்படுத்தும். அதற்கு அவை உரிய முறையில் செய்யப்பட வேண்டும். முறைமை மாறிச் செய்யப்படும் நடவடிக்கைகளினால், உரிய பலன் கிடைப்பதில்லையே என இஸ்லாத்தைக் குறை கூறுவது அர்த்தமற்ற செயலாகும்.
எனவே, எம்மை அடைந்துள்ள இந்த ரமழானை எமது வாழ்க்கையின் திருப்பு முனைக்கான ஒரு புதிய ரமழானாகப் பார்ப்போம். தக்வா எனும் உணர்வை நிரப்பிக் கொள்ளும் ஒரு ரமழானாக இந்த ரமழானை கழிப்பதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக?
Vidivelli
No comments:
Post a Comment