நுண்கடன் திட்டத்தினைக்கட்டுப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் சனிக்கிழமை (12) ஆர்ப்பாட்டப்பேரணி நடைபெற்றது.
வந்தாறுமூலை பொது மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியானது, அம்பலத்தடி நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி, சந்தை வரை பேரணியாகச் சென்று மீண்டும் நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் முடிவடைந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியோரத்தில் நின்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களையெழுப்பினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனைத் திப்பிச்செலுத்த முடியாமை காரணமாக 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனைத்தவிர குடும்பங்களில் விரிசல், சமூகச்சீர்கேடுகள், அத்தோடு நுண்கடன் பெற்ற பலர் மனவுளைச்சாலுக்குள்ளான சம்பவங்கள் பலவும் காணப்படுகின்றன.
நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது, உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே கடன்களை வழங்க வேண்டும்.
கடன் சிபார்சுக்காக கிராம சேவக உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கங்களின் அனுமதி கையொப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் வழங்க நடவடிக்கையெடுத்தல், கடன் அறவிடுவோர் எக்காரணம் கொண்டும் கிராமங்களுக்கோ, வீடுகளுக்கோ நேரடியாக வந்து கடன் பணத்தை அறவிடுவதை விடுத்து, நுண்கடன் வழங்கும் நிலையங்களில் அறவிடல், ஆய்ந்தறிந்து ஒரு நபருக்கு ஒரு நுண்கடன் நிறுவனமே கடன் வழங்க வேண்டுமே தவிர, பல நுண்கடன் நிறுவனங்கள் ஒரு நபருக்கு கடன் வழங்கக்கூடாது போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத்தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பே.சபேஷ்
(thehotline.lk இணையத்தளம்)
No comments:
Post a Comment