இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளின் சுயநிர்ணய விவகாரத்தில் சவுதி முஹம்மது பின் சல்மானனும் மன்னர் சல்மானும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஷியா இனத்தவர்கள் பெரும்பாலாக வாழும் ஈரானுக்கும் சன்னி இனத்தவர்கள் பெரும்பாலாக வாழும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நெடுங்காலமாக தீராப்பகை நிலவி வருகிறது.
இருப்பினும், பாலஸ்தீனம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இரு நாடுகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவான ஒருமித்த நிலைப்பாட்டை பேணி வருகின்றன. பாலஸ்தீனத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டில் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான அல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இந்த பள்ளிவாசலின் பரம்பரை பாதுகாவலராக சவுதி மன்னர் பரம்பரை இருந்து வருகிறது. ஆனால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தூதரக ரீதியிலான எவ்வித உறவுகளும் இல்லை. எனினும், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிவரும் பகைமை நீங்கி நல்லுறவை ஏற்படுத்தும் அரபு நாடுகளின் அமைதி முயற்சிக்கு சவுதி அரேபியா கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து தலைமையேற்று வருகிறது.
ஆனால், ஏமன் நாட்டில் அதிபரின் ஆட்சியை வீழ்த்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை மறைமுகமாக தூண்டிவிடுவதுடன் ஆயுத உதவியும் செய்துவரும் ஈரான் அரசை சவுதி அரேபியா கடுமையாக எதிர்த்து வருகிறது.
ஏமன் அதிபருக்கு தேவையான விமானப்படை உள்ளிட்ட உதவிகளை சவுதி தலைமையிலான அரபு நேசநாட்டுப் படைகள் செய்து வருகின்றன. இவ்விவகாரத்தில் சவுதிக்கு ஆதரவாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இருந்து வருகின்றன.
இந்நிலையில், பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான், தங்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாட இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த புதிய கருத்து பாலஸ்தீனம் - இஸ்ரேல் விவகாரத்தில் இத்தனை ஆண்டு காலமாக சவுதி அரேபியா கடைபிடித்து வந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுபாடு கொண்டதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தற்போது கருதுகின்றனர்.
சவுதி இளவரசரின் பேட்டி இதர ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் சவுதி மன்னர் சல்மான் பாலஸ்தீனத்தை பலமாக ஆதரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜெருசலேமை தலைநகராக கொண்டு சுயாட்சி பெற்ற நாட்டை உருவாக்கும் பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சவுதி அரசு எவ்வித மாற்றமும் இல்லாத நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என மன்னர் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார் என சவுதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment