ஆசிய உதைபந்தாட்டப் பேரவைத் தலைவரான ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீபா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
தனியார் ஜெட் விமானமொன்றில் தனது தூதுக் குழுவினருடன் கடந்த 2 ஆம் திகதி முற்பகல் 10.50 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த தலைவரை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா, செயலாளர் ஜஸ்வர் உமர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அமோக வரவேற்பளித்தனர்.
ஆசிய உதைபந்தாட்டப் பேரவையின் தூதுக் குழுவில் அதன் பொதுச் செயலாளர் வின்சர் ஜோன், சர்வதேச உறவுகள் பணிப்பாளர் ரவிக்குமார், தலைவரின் காரியாலய அலுவலர்களான ஹசன் யூசுப் மற்றும் அப்பாஸ் மர்ஸுக் ஆகியோர் அடங்குகின்றனர்.
இலங்கைக்கான புதிய மூலோபாயத் திட்டங்கள் பற்றி கலந்துரையாடவுள்ள மேற்படி பேரவைத் தலைவர், உதைபந்தாட்டத்தை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கென ஆசிய உதைபந்தாட்டப் பேரவை எந்தெந்த விடயங்களில் ஆதரவை வழங்குவதென்பது குறித்தும் ஆய்வுசெய்யவுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை நேரில் சந்தித்து உரையாடவுள்ள அவர் இலங்கை உதைபந்தாட்டத்திற்கான தனது ஆதரவையும் வெளிப்படுத்தவுள்ளார்.
“ஒரே ஆசியா, ஒரே இலக்கு” எனும் தனது பெருவிருப்ப தொலைநோக்கின் பிரகாரம் அயராது உழைத்து வரும் ஆசிய உதைபந்தாட்டப் பேரவைத் தலைவர் பேரவையிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கும் நாடுகளுக்கு ஆதரவை வழங்கி வருகின்றார். அவர் மினி-பிச் (Mini-pitch) தலைவரின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் இலங்கைக்கான உட்பரிமாணத்தைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்கள் போன்ற விசேட செயற்திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளார். ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீபா கடந்த 3 ஆம் திகதி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை இராப் போசன விருந்தொன்றின் போது சந்தித்து உரையாடினார்.
No comments:
Post a Comment