சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக உணவு பொருட்கள் மற்றும் ஹோட்டல்களின் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. இந்த விலை அதிகரிப்பை அடுத்து இதன் புதிய விலை ஆயிரத்து 679 ரூபாவாகும். இறுதியாக எரிவாயுவின் விலை 2017 செப்டெம்பர் மாதத்தில் அதிகரிக்கப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இது 110 ரூபாவாகும்.
சமகால அரசாங்கம் பதவிக்கு வந்த வேளையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ஆயிரத்து 896 ரூபாவாக இருந்தது. சமகால அரசாங்கம் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இதனை ஆயிரத்து 332 ரூபாவாக விலை குறைப்பு செய்தது. 2017ம் ஆண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை இரண்டாயிரத்து 441 ரூபாவாகும் என்று நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் 2014 -2015 வருட காலப்பகுதியில் நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் இதன்விலை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை என்று நுகர்வோர் அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment