பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜப்பான் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக ஸ்ரீஇராலக நேற்று அனுமதி வழங்கினார். ஜப்பான் செல்ல இன்று 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஞானசார தேரரின் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயணத்தை நீதிவான் இவ்வாறு தற்காலிகமாக நீக்கினார்.
ஜப்பான் சுமோபா சம்புத்த விஹாரையில் இடம்பெறும் விசேட மத அனுஷ்டானங்களுக்காக செல்ல ஞானசார தேரர் அனுமதி கோரியிருந்த நிலையிலேயே நீதிவான் நேற்று அதற்கான அனுமதியைப் வழங்கினார்.
குருணாகல் தோரயாய பகுதியில், ஞானசார தேரரைக் கைது செய்ய சென்ற திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக உள்ளிட்ட பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில், ஞானசார தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் நிலையிலேயே, அவ்வழக்கு தொடர்பில் அவரது வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே நேற்று அத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது
பொலிஸ் உத்தியோகத்தரின் கடமை க்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தியமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக இலங்கை தண்டனை சட்டக் கோவையின் 140,183,186,344 ஆகிய அத்தியாயங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment