200 டன் எடையுடன் அதிவேகமாக பாய்ந்து சென்று திட்டமிட்ட இலக்கினை தாக்கி அழிக்கும் அதிநவீன ‘சர்மாட்’ ஏவுகணையை ரஷியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாகவும், அவற்றை மிஞ்சும் வகையிலும் ரஷியா தனது ஆயுத பலத்தை தரம் உயர்த்தியும், அதிகரித்தும் வருகிறது.
இந்நிலையில், ரஷியாவிடம் முன்னர் இருந்த கண்டம்விட்டு பாய்ந்து தாக்கும் ’வோயுவோடா’ ரக ஏவுகணைகளுக்கு மேற்கத்திய நாடுகள் ‘சாத்தான்’ என்று அழைத்து வந்தன. ‘சர்மாட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளை மேம்படுத்தி, முன்னர் ‘சாத்தான்’ ஏவுகணை சுமந்து சென்ற போர் ஆயுதங்களை காட்டிலும் அதிகமான எடையை தாங்கிச் செல்லும் அதிக வீரியமான ஏவுகணைகளை ரஷியா தற்போது தயாரித்து வருகிறது.
ஒவ்வொன்றும் சுமார் 200 டன் எடையுள்ள இந்த ஏவுகணைகள் அனைத்தும் எதிரி நாடுகளின் ஏவுகணை தடுப்பு கேடயங்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு திட்டமிட்ட இலக்கினை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை.
பூமியின் தென் துருவத்தில் இருந்து வடதுருவம் வரை இடைப்பட்ட தூரத்தில் உலகில் எந்த நாட்டில் உள்ள இலக்கையும், இந்த ஏவுகணையால் தாக்கி அழித்துவிட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், 200 டன் எடையுடன் அதிவேகமாக கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து செல்லும் அதிநவீன ‘சர்மாட்’ ஏவுகணையை ரஷியா இன்று பரிசோதித்தது.
வடமேற்கு ரஷியாவில் உள்ள பிலெசெட்ஸ்க் பகுதியில் உள்ள தளத்தில் இருந்து இன்று பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
No comments:
Post a Comment