கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் ‘பாதணிகள் மற்றும் தோல்பொருட்கள் கண்காட்சி 2018’ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று (02) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் பாதணிகள் மற்றும் தோல்பொருள் கைத்தொழில்துறையை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதித் துறையில் ஈடுபடும் இயலுமையுள்ள திறமையான உற்பத்தியாளர்களை இனங்கண்டு அவர்களை அத்துறையில் ஈடுபடுத்தும் நோக்குடன் பாதணிகள் மற்றும் தோல்பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம், கைத்தொழில் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து இக்கண்காட்சியை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருகின்றது.
10 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியில் நாட்டின் அனைத்து முன்னணி பாதணி மற்றும் தோல்பொருள் உற்பத்தியாளர்கள் பங்குபற்றுவதுடன், 230 கண்காட்சிக் கூடங்களைக் கொண்ட இக்கண்காட்சியில் மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த உற்பத்திகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை கண்காட்சியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மூலப்பொருட்கள், இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள் விநியோகத்தர்களும் பங்குபற்றுவதுடன் தேசிய தோல் பொருள் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் நவீன தொழிநுட்பக் கருவிகளும் இங்கு குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை நடைபெறும் இக்கண்காட்சி முற்பகல் 10 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
கைத்தொழில், வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேரசிங்க, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க, இலங்கை பாதணிகள் தோல் பொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.ஜீ. நிமலசிறி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment