முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் - தம்புள்ளை பள்ளிவாசல் முதல் அம்பாறை பள்ளிவாசல் வரை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2018

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் - தம்புள்ளை பள்ளிவாசல் முதல் அம்பாறை பள்ளிவாசல் வரை

உலகில் அதிகரித்து வரும் இஸ்லாத்தின் பாரிய வளர்ச்சியும், முஸ்லிம்களிடம் அதிகரித்துவரும் மார்க்க அறிவுப் பற்றும், பௌத்த மதத்தின் வீழ்ச்சியும், சில தீவிர மதவாதிகளுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்த அச்சம் கலந்த எச்சரிக்கையால் மத உணர்வில் ஊறிய சில படித்தவர்களும் பாமரர்களும் முஸ்லிம் விரோத உணர்வுக்கு உடன் ஆட்படுகின்றனர்.

இலங்கையின் யுத்தம் இல்லாத சூழல், யுத்தத்தில் பெற்ற வெற்றி இவைகளை சாதகமாகி, இலங்கையின் பல்லினத் தன்மை இல்லாமலாக்கப்பட்டு இலங்கை ஒரு தூய பௌத்த தேசமாக வேண்டும் என்ற மதப் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க சிலர் முற்படுகின்றனர். ஏனைய சமூகத்தின் மத அடையாளங்களை வரலாற்றுத் தடங்களை அழிப்பதன் ஊடாக இந்த இலக்கை நோக்கி பாமர மக்களை திசை திருப்புகின்றனர்.

மனிதன், மதவுணர்வு கலந்து தூண்டப்படும்போது அதற்கு இலகுவில் ஆட்பட்டு விடுகின்றான். இலங்கையின் இன்றையப் பிரச்சினையில் இது ஒரு முக்கியமான, அதேநேரம் மிகவும் ஆபத்தான காரணமாகும்.

BBS மற்றும் ஏனைய தீவிர இனவாத அமைப்புக்களின் தோற்ற வரலாறை உன்னிப்பாக அவதானித்தால் அங்கு அதன் முன்னணியில் நிற்பவர்களின் அரசியல் பொருளாதார சுயநலன் பின்னணியில் இருப்பதை கண்டுகொள்ளலாம்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட மதப்பிரசாரம், கட்டாய மதமாற்றம் காரணமாக இலங்கை முஸ்லிம்களின் விகிதாசாரக் கட்டமைப்பு அதிகரித்து வருகின்றது என்றும், 2020, 2031 களில் இலங்கை முஸ்லிம் நாடாகப் போகின்றது என்றும் பிரச்சாரம் செய்கின்றார்கள். இலங்கையின் 1981 - 2011 வரையான சமூக வளர்ச்சியில் சிங்களவர்களின் வளர்ச்சி - 38.4 வீதம், தமிழர்களின் வளர்ச்சி – 35.5 வீதம், முஸ்லிம்களின் வளர்ச்சி - 76.4 வீதம் என்ற ஒரு கணக்கை காட்டி இதன்பின்னணியை திரிபுபடுத்தி சிங்கள மக்களை அச்சமூட்டுகின்றனர்.
இலங்கையின் 1911 இனப்பரம்பல் கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் - 60.25 வீதம், தமிழர்கள் - 22.85 வீதம், முஸ்லிம்கள் - 6.91 வீதமாகும். அதேநேரம் இலங்கையின் 2012 ம் ஆண்டின் அண்மைய இனப்பரம்பல் கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் - 70.19 வீதம், தமிழர்கள் - 12.61 வீதம், முஸ்லிம்கள் - 9.7 வீதமாகும்.

1911 - 2012 வரையான நூறு வருடத்தில் சிங்களவர்கள் - 10 வீதத்தினால் அதிகரித்துள்ளனர், தமிழர்கள் - 10 வீதத்தால் குறைந்துள்ளனர், முஸ்லிம்கள் வெறும் - 2 வீததால் மட்டுமே அதிகரித்துள்ளனர்.

கொடிய யுத்தத்தினால் தமிழ் சமூகத்தில் பலர் உள்நாட்டில் இறந்தும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் போனதால் அவர்களின் விகிதாசாரம் வீழ்ச்சிகண்டதன் விளைவு முஸ்லிம் விகிதாசாரம் சற்று உயர்வுகண்டுள்ளது. அதுவும் வெறும் இரண்டு வீதத்தால். இதை மதத்துடன் இணைத்து சில பிக்குகள் பிழையாகப் பாடம் நடத்துகின்றனர். சமூகத்தையும் பிழையாக வழிநடத்துகின்றனர்.

கொத்து ரொட்டியில் மருந்து இட்டு ஒரு சமூகத்தின் பிள்ளைப்பேறை நிறுத்தலாம் என்கிற மிக கீழ்த்தரமான குற்றச்சாட்டின் பின்னணியில் தான் இறுதியாக நேற்று (27.02.2018) அம்பாறை பள்ளிவாசல் மீதும், கடைகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் அமைகிறது. 

இது நகைப்புக்குரிய காரணமாயினும், இடம்பெற்ற வன்முறையின் வீரியம் அதிகம். முஸ்லிம்களின் புனித வேதமான அல்-குரான் பிரதிகளை எரிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதைத்தீண்டுவதற்கே முஸ்லிம்களுக்கு நிபந்தனைகள் உண்டு. மாற்று மத சகோதரர்கள் அதைத்தொட்டு எரிப்பதற்கு இறைவன் வழங்கப்போகும் தண்டனை சாதாரணமானது அல்ல.

அரசியல் தலைவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்றோ
அரசாங்கம் தீர்வினைத்தரும் என்றோ
சர்வதேசம் உதவி செய்யும் என்றோ
நாங்கள் நம்பப்போவதில்லை..
இறைவனிடம் பாரஞ்சாட்டிவிட்டோம்.

இனி உங்களை இறைவன் பார்த்துக்கொள்வான்.. இன்ஷா அல்லாஹ்..

எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்.

No comments:

Post a Comment