உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கன்னி பிரச்சாரக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. இதன் போது கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய கொள்கை திட்டத்தை வெளியிட்டு வைக்க உள்ளார்.
தங்காலையில் அமைந்துள்ள கால்டர்ன் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து வேட்பாளர்களும் இன்று அழைக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவும், கட்சியின் தேசிய கொள்கை திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுமான தீர்மானம் இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்டது.
இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறுகையில் ,
தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கையில் அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்த்தனர். இதனால் தான் சுயாதீனமாகவும் தனித்தும் செயற்பட கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கினார்.
தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒட்டிக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் இருக்கும் போது தேர்தல்களில் எவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவளிக்க முடியும். இதனால் கூட்டு எதிர்க்கட்சி தனித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதனை தவறு என கூறுவதற்கு சுதந்திரக் கட்சிக்கு தார்மீக உரிமை கிடையாது.
எனவே தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயாதீனமாக செயற்படுகின்றோம். இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு என்று தனித்துவமான தேசிய கொள்கை திட்டம் உள்ளது. அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெளியிட்டு வைப்பார். நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரமாகவே இது காணப்படும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பொறுத்த வரையில் வெற்றி இலக்குகளை அடைவது உறுதியாகும். கூட்டு எதிர்க் கட்சியில் செயற்படும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குவும் தயாராகவே உள்ளோம். தாமரை மொட்டு சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சார நடவ டிக்கைகளில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment