உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் மற்றும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிர்ணயம் செய்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு, முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் விதானகமகே நந்தராஜாவினால் நேற்று (04) இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 8 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த அடிப்படை உறிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு தொடர்பிலான புதிய எல்லை நிர்ணயம் காரணமாக, பொது மக்களும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தவிடுமாறும் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளார்.
அத்துடன் அம்பகமுவ மூன்றாக பிரிக்கப்பட்டதாகவும், அதில் சிவனொளி பாதமலை அமைந்துள்ள பகுதி உள்ளடங்கும் பிரிவில் சிங்கள பெளத்தம் தொடர்பில் அடிப்படை பிரச்சினை நிலவுவதாகவும் மனுதாரர் அவரது மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் இந்த எல்லை நிர்ணயமானது மத நல்லிணக்கத்துக்கும் பாதகமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட அம்பகமுவ எல்லை நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலையும் ரத்து செய்யுமாறு நீதிமன்றைக் கோரியுள்ளார்.
முன்னதாக அம்பகமுவ பிரதேச சபை அம்பகமுவ, மஸ்கெலிய, நோர்வூட் என மூன்று பகுதிகளாகவும், நுவரெலிய பிரதேச சபை நுவரெலிய, கொட்டகல, அகரபதனை என்று மூன்று பிரிவுகளாகவும் அண்மையில் பிரிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப் படுத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment