சீரற்ற காலநிலை காரணமாக இவ்வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் எந்த வித மாற்றங்களும் இடம்பெறாது என பதில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி. சனத்பூஜித தெரிவித்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் இவற்றிற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை. எனவே க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்...
பரீட்சாத்திகள் அனைவருக்குமான பரீட்சை அனுமதி பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை வெள்ள அனர்த்தம் போன்றவற்றால் பரீட்சை அனுமதி பத்திரங்கள் சேதமடைந்திருந்தால் மீண்டும் புதிய அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
இதே வேளை இன்று (05) நள்ளிரவு முதல் கா.பொ.த. சாதாரண தரத்திற்காக நடாத்தப்படும் தனியார் வகுப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இவ்வருடம் நாடளாவிய ரீதியில் 688,573 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு 5116 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment