அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு கிடையாது - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு கிடையாது - மஹிந்த அமரவீர

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையும் அரசியல் தீர்மானத்தை சுதந்திரக் கட்சி ஒருபோதும் எடுக்காது. அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்திற்குள் பிரச்சினை உள்ளது அப்பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு எட்டப்படும் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் பிரதான பங்காளிக் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளது. பொதுஜன பெரமுனவிற்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பிரதேச மட்டத்தில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நிர்வாக ரீதியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் தற்போது தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் எதிர்வரும 21 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி வழங்கிய பங்களிப்பினை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நன்கு அறிவார்கள்.

எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையும் வகையில் ஒருபோதும் அரசியல் தீர்மானங்களை எடுக்கமாட்டோம். அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் ஒன்றினைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

சுதந்திரக் கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் இடையில் தற்போது கருத்து வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள பிரச்சினைக்கு உயர்மட்ட தரப்பினால் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு பெற்றுக் கொள்ளப்படும்.

சுதந்திரக் கட்சியை விமர்சித்து ஒரு தரப்பினர் அரசியலில் பிரபல்யமாக முயற்சிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாட்டால் எவ்வித பாதிப்பும் சுதந்திர கட்சிக்கு ஏற்படாது.

கூட்டணியை பலப்படுத்தல் குறித்து ஜனாதிபதி, பிரதமர் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். கூட்டணியின் அனைத்து பங்காளிக் கட்சி தரப்பினரையும் ஒன்றினைத்து எதிர்வரும் வாரங்களில் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக இடம்பெறும். எக்காரணிகளுக்காகவும் கூட்டணியையும், அரசாங்கத்தையும் பலவீனமடைய இடமளிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment