கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்ட மூலத்தை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - பேராசிரியர் சந்தன அபயரத்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்ட மூலத்தை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - பேராசிரியர் சந்தன அபயரத்ன

(நா.தனுஜா)

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்ட மூலத்தை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குதல் தொடர்பில் பொதுவாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு முரணாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால், அது இலவசக் கல்வியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும். ஆகவே இலவசக் கல்வியின் மூலம் பயனடைந்த அனைவரும் இச்சட்ட மூலத்தைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் என்று  தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தலைவரும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சந்தன அபயரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது தற்போது எமது நாடு மிகவும் தீர்மானம் மிக்கதொரு தருணத்தில் இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சட்ட மூலமொன்றை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இதனுடன் தொடர்புடையதாக பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்த சட்ட மூலத்தின் விளைவாக இலவசக் கல்வி நடவடிக்கை வெகுவாகப் பாதிப்படையும் என்பதால், அதுபற்றித் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது. உயர் கல்வி என்பது கல்வியமைச்சிற்கு கீழ் உள்ளடங்குகின்ற விடயதானமாகும். அவ்வாறிருக்கையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் என்ற உயர் கல்வி வழங்கல் கட்டமைப்பை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆகவே கல்வியமைச்சின் வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்பு இல்லாமல், மேற்படி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு, டிப்ளோமா சான்றிதழ் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக வழங்கப்படுவதென்பது இலவசக் கல்வியின் மீது பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே எமது கருத்தாகும்.

அதுமாத்திரமன்றி புதிதாக சமர்ப்பிக்கப்படவுள்ள சட்ட மூலத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான முறைமைகள் தொடர்பில் தெளிவான தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை. வழமையாக க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால் இந்தச் சட்ட மூலத்தின்படி வழமையான நடைமுறைகள் பின்பற்றப்படமாட்டாது.

மாறாக உயர் கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவது குறித்த தீர்மானங்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினாலேயே மேற்கொள்ளப்படும். எனவே உரிய தகுதியைப் பூர்த்தி செய்யாத, இறுதித் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் உயர் கல்விக்கான உள்வாங்கப்படக்கூடிய சாத்தியம் இதன் மூலம் உருவாகின்றது. 

மாணவர்களின் தெரிவில் மாத்திரமன்றி உயர் கல்வியைக் கற்பிப்பதற்கான பேராசிரியர்கள் மற்றும் வளவாளர்களைத் தெரிவு செய்வதிலும் உரிய தகுதிகள் பேணப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அதேவேளை மேற்படி சட்ட மூலத்தின் சில சரத்துக்கள் மாணவர்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இராணுவத்தினர் அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொருத்தமானதும் அவசியமானதுமான விதத்தில் பாடவிதானங்களைத் தயாரிப்பதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர்ந்த எந்தவொரு விடயதானங்கள் தொடர்பிலும் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா சான்றிதழ் வழங்குவதற்கான அங்கீகாரம் குறித்த பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுகின்றது.

அத்தோடு இந்தக் கட்டமைப்பிற்குள் எந்தவொரு மாணவர் சங்கங்களும் செயற்பட முடியாது. ஏனைய பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான வாய்ப்புக்கள் போதியளவில் வழங்கப்பட்டுள்ளன. எனினும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தில் அவற்றுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே கல்விச்செயற்பாட்டின் அடிப்படைகளுக்கு முரணாக இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பது தெளிவாகப் புலனாகின்றது.

எனவே இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இதனைப்போன்று கட்டணம் அறவிட்டு கல்வியை வழங்குகின்ற மேலும் பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் உருவாகக் கூடும். க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பல மாணவர்கள் எமது நாட்டில் இருக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கையில் நிதி வசதி கொண்ட வரையறுக்கப்பட்ட ஒரு பிரிவினருக்கு மாத்திரம் கல்வி வாய்ப்பை வழங்கும் நிலை இந்த சட்ட மூலத்தின் ஊடாக உருவாக்கப்படும். ஆகவே எமது நாட்டில் இலவசக் கல்வியின் மூலம் பயனடைந்த அனைவரும் இலவசக் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த சட்ட மூலத்தைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment