(இராஜதுரை ஹஷான்)
மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மீள ஆரம்பிக்க கொவிட்-19 தடுப்பு செயலணி அனுமதி வழங்கவில்லை. மாவட்டங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் புகையிரத போக்குவரத்து சேவை வழமை போன்று இடம்பெறும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொது பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீள ஆரம்பிக்க கொவிட்-19 தடுப்பு செயலணியிடம் கோரிக்கை முன்வைத்தோம்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற், கொண்டு செயலணி மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கவில்லை.
கடந்த மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் மாவட்டத்திற்குள் மாத்திரம் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் 70 ற்கும் அதிகமான புகையிரத பயணங்கள் ஒரு நாளைக்கு சேவையில் ஈடுப்படுகின்றன.
அம்பேபுஸ்ஸ - கொழும்பு கோட்டை, கொச்சிக்கடை- கொழும்பு கோட்டை, அவிசாவளை- கொழும்பு கோட்டை அளுத்தகமை - கொழும்பு கோட்டை ஆகிய பகுதிகளில் மாத்திரம் புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment