தென் சீனக் கடலில் போட்டியிடும் பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான சீனக் கப்பல்கள் கழிவு நீரை வெளியேற்றி வருவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் அளித்த அறிக்கையை விசாரிக்க பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு அமைச்சர் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ், புருனே, தைவான், வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் உரிமை கோரும் ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அருகில் தென் சீனக் கடலில் சீனா தொடர்ந்தும் தனது கடலோர காவல் படை மற்றும் மீன்பிடி படகுகளுடன் பிரசன்னமாகின்றது.
சீனக் கப்பல்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத மனித கழிவுகளால் ஏற்பட்ட சேதத்தைக் காட்டும் வகையிலான செய்மதி படங்களை ஹல் செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த கழிவுகள் கொட்டப்படுவதை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் உண்மையாக இருந்தால், அப்பகுதியில் கடல் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதிப்பாகும் என்று பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்சானா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தென்சீனக் கடலில் எத்தகைய முரண்பாடுகள் காணப்படினும் அனைத்து நாடுகளும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச் சூழலின் பொறுப்பான பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் தென் சீனக் கடலில் பதற்ற நிலைமைகள் மீண்டும் இவ்வாண்டு அதிகரித்துள்ளன. பெய்ஜிங் தனது கடலோர காவல் படை கப்பல்களை மிரட்ட முயற்சிப்பதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் கிட்டத்தட்ட முழு தென் சீனக் கடலையும் தனதாக்க சீனா முற்படுகிறது. இந்த கடல் வழியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 டிரில்லியன் டாலர் கப்பல் வர்த்தகம் உள்ளது.
மறுபுறம் சீனாவின் இத்தகைய அத்துமீறல்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று 2016 ஆம் ஆண்டில் ஹேக்கில் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரொய்ட்டர்
No comments:
Post a Comment