இலங்கைக்கு கடத்தவிருந்த மூவாயிரம் கிலோ கடல் அட்டைகள் இந்தியாவில் பறிமுதல் : நாட்டு படகுகளுடன், 7 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

இலங்கைக்கு கடத்தவிருந்த மூவாயிரம் கிலோ கடல் அட்டைகள் இந்தியாவில் பறிமுதல் : நாட்டு படகுகளுடன், 7 பேர் கைது

கடந்த ஆறு நாட்களில் இலங்கைக்கு கடத்த இருந்த தடை செய்யப்பட்ட மூவாயிரம் கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் 24 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நாட்டு படகுகளும், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 7 குற்றவாளிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கைக்கு அருகே ராமேஸ்வரம் உள்ளதால் மன்னார் வளைகுடா கடல் வழியாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், கடல் பல்லி, டொல்பின் துடுப்பு உள்ளிட்டவைகள் சமீப காலமாக அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (13) ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மண்டபம் வனத்துறையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேதாளை கடற்கரை நோக்கி வந்த நாட்டுப்படகு ஒன்று வனத்துறையினரை கண்டதும் கரைக்கு வராமல் மீண்டும் கடலுக்குள் சென்றது இதனை கண்ட வனத்துறையினர் ரோந்து படகில் துரத்தி சென்று முயல் தீவு அருகே வைத்து தப்பி சென்ற நாட்டுபடகை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் படகில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்ததையடுத்து படகையும் அதில் இருந்த இருவரையும் கைது செய்து மண்டபம் வனத்துறை சோதனை சாவடிக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் வனத்துறையினரை கண்டதும் நாட்டுபடகில் இருந்து 500 கிலோ உயிர் கடல் அட்டைகளை கடலில் போட்டு விட்டதாகவும படகில் சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் மட்டுமே இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வேதாளையை சேர்ந்த மீரான்கனி, முகமது நசீர் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மண்டபம் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 8 இலட்சம் மதிப்பிலான நாட்டுபடகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களில் மண்டபம் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் 3 ஆயிரம் கிலோ கடத்தல் கடல் அட்டைகள் மற்றும் 3 நாட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 7 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment