சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் நீருடன் சேர்ந்ததினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்று முதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சக்தி வலு அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சரவை இணை பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால் சுத்திகரிப்பு நிலையம் அமைந்திருந்த பகுதி நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் தண்ணீரில் எரிபொருள் கசிவு ஏற்பட்டது என தெரிவித்தார்.
இந்த சுத்திகரிப்பு நிலையம் 1960 இல் இருந்து நிலத்தடி சுத்திகரிப்பு நிலையமாக உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சக்தி வலு அமைச்சர் என்ற வகையில் நான் இரண்டு குழுக்களை நியமித்துள்ளேன்.
சக்தி வலு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உபுல் விஜசேகர தலைமையிலான குழுவொன்று இந்த சம்பவத்தின் உண்மையான காரணம் குறித்து ஆராயும், இது அதிகாரிகளின் தவறு காரணமாக ஏற்பட்டதா என்பது பற்றியும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்க என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஆராய உள்ளதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment