பேருவளை நளீமிய்யா கலாபீடத்தில் கொரோனா இடைக்கால சிகிச்சை முகாமை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு சிறந்ததொரு செய்தியை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
நளீமிய்யா கலாபீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா இடைக்கால சிகிச்சை முகாமை அரச உயரதிகாரிகள் சகிதம் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நளீமிய்யா கலாபீட ஸ்தாபகர் மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியார் பதவிக்கு வந்த அரசாங்கங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றபோது உதவிகள் செய்து முஸ்லிம் சமூகத்தையே கௌரவப்படுத்தியதை இந்நாட்டு எந்த மக்களாலும் மறக்க முடியாது.
அதேபோல் எமது அரசாங்கத்திற்கும் உதவிகள் ஒத்துழைப்புகள் தேவைப்படுகின்ற இக்கால கட்டத்தில் அன்னாரது புதல்வர் யாகூத் நளீம் இந்த நளீமிய்யா கலாபீடத்தை கொரொனா சிகிச்சை நிலையத்துக்கு வழங்கி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியமை இந்நாட்டு முஸ்லிம்களுக்கு கிடைத்த கௌரவமாகும். அதற்காக அவருக்கு நான் நன்றி கூர்கிறேன்.
இந்த கலாபீடம் மீது அண்மைக்காலமாக இனவாதிகள் வைத்துள்ள வீண் சந்தேகங்கள் இதன் மூலம் துடைத்தெறிய இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என நான் நம்புவதாகவும் இக்கலாபீடத்தின் அனைத்துவித பாதுகாப்புக்கும் நானும் எனது அரசாங்கமும் உறுதுணையாக இருப்பேன் என்றும் மர்ஜான் பளீல் இதன்போது தெரிவித்தார்.
(அஜ்வாத் பாஸி)
No comments:
Post a Comment