கொவிட்-19 பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய இயலாமல் போகும் மேலதிக மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை மொத்தமாக அரசாங்கத்தால் கொள்வனவு செய்து விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் தங்களது உற்பத்திகளை குறிப்பாக மரக்கறிகள் மற்றும் பழவகைகளை வழக்கமான முறையில் போக்குவரத்துச் செய்யவும் விற்பனை செய்யவும் இயலாமையால் அழிவடைந்து போகும் நிலையில், சிறிய மற்றும் நடுத்தர அதேபோல் பாரிய விவசாயிகள் பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றமை தெரிய வந்துள்ளது.
மேலும், நுகர்வோர் நியாய விலையில் தரமான மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் விற்பனை செய்ய இயலாத தொகையான மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை மாவட்ட விலைமனுக் குழுவின் விலையின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் / அரசாங்க அதிபர்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கும், அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தொகையான மரக்கறிகள் மற்றும் பழவகைகளை பயணத்தடை முடிவுறும் வரை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கும், அனைத்து அரச மருத்துவமனைகளுக்கும், முப்படையினர் மற்றும் இடம்பெயர்ந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கும் தேவைக்கேற்ப இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமையால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் பற்றாக்குறையின்றி விநியோகிக்கும் பொறிமுறையொன்று தற்போது லங்கா சதொச நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த பொறிமுறையை தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்கு இயலுமான வகையில் இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை சுங்கத்தால் அரச உடமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சரும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment