மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு விளக்கமளித்துள்ள கல்வி அமைச்சர் ஜி.எல்.பீறிஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு விளக்கமளித்துள்ள கல்வி அமைச்சர் ஜி.எல்.பீறிஸ்

இராஜதுரை ஹஷான்

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் நான்கு கட்டமாக திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி குறித்து வினவியபோது இதனைத் தெரிவித்த 

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகளை திறக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இவ்வருடத்தில் இடம்பெறவுள்ள தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அத்தீர்மானத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க நெருக்கடியான சூழ்நிலையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் காரணமாக கல்வித்துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. இச்சவாலை வெற்றி கொள்ள மறுசீரமைக்கப்பட்ட திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. குறுகிய காலகட்டத்தில் பாடத்திட்டங்களை சிறந்த முறையில் நிறைவு செய்ய புதிய கொள்கை திட்டத்தை செயல்படுத்துவது அவசியமாகும்.

பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து பிரதேச தொடர்பு குழுவினரது பரிந்துரைகளுக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கும் அமையவே தீர்மானம் எடுக்கப்படும்.

பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதே தவிர எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment