(ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வசீம்)
கண்டி மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் அரச அதிகாரிகளில் அதிகமானவர்களுக்கு இன்னும் தடுப்பூசி ஏற்றப்படாமல் இருக்கின்றது. குறிப்பாக கொவிட்டை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் சமுர்த்தி அதிகாரிகள், கிராம சேவை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் அதிகமானவர்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்படாமல் இருக்கின்றது.
அதேபோன்று சுகாதார துறையினருக்கு பின்னர் கொவிட் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் பொலிஸாரே ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கும்போது பொலிஸாரில் 40 வீதமானவர்களுக்கு இன்னும் தடுப்பூசி வழங்கப்படாமல் இருக்கின்றது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும்போது அவர்களுக்கு பத்திரம் ஒன்றை வழங்கி, ஒரு தடவை தடுப்பூசி ஏற்றுனால் போதுமானது என குறிப்பிட்டு, கையொப்பம் பெறப்பட்டிருக்கின்றது.
அந்த மக்கள் தங்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியே வழங்க வேண்டும் என யாரும் தெரிவிக்கவில்லை. அதனால் முதலாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்ட அனைவருக்கும் அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எமது கடல் பகுதியில் இரசாயன பொருட்களுடன் வந்த கப்பல் தீப்பற்றி எரிந்ததில் கடல் உணவுகளை உட்கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். அதனால் மீன் சாப்பிடுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை ஆய்வு செய்து மக்களுக்கு அறிவிக்க அரசாங்கம் தவறி இருக்கின்றது. அதனால் மீன் சாப்பிடக்கூடாது என பொய் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கும் அரசாங்கம், மீன் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆய்வு செய்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
அதேபாேன்று பொவிட் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபா, மலையக பகுதிகளில் அதிகமான மக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர்களுக்கும் இதனை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment