இரு வாகனங்கள் சறுக்கிய காரணத்தினால் அந்த இடத்தில் ஏதாவது இருந்திருக்கின்றது என்பதை சந்தேகிக்கத் தோன்றுகின்றது என தமிழ் தேசி கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில், அதிகாலை நேரத்தில் வாகனத்தை நிறுத்தி பணம் கட்டிவிட்டு வெளியேறுகின்ற போது, அச்சம்பவம் நடைபெற்றது.
அந்தவேளை, வேகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ஈரமாக இருந்த வீதியிலுள்ள திருப்பமொன்றில் வாகனம் சென்று கொண்டிருந்த நிலையில், சறுக்கி வீதியின் இரு பக்கமும் உள்ள பாதுகாப்புக் கவசங்களை மாறி மாறி மோதி வாகனம் சுழலத் தொடங்கியது. அவ்வாகனம் அங்கு சறுக்குவதற்கு எண்ணெய் அல்லது வேறு ஏதாவது இருந்ததா என்பது எமக்குத் தெரியவில்லை.
ஏதாவது இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், எனது வாகனம் அவ்விடத்தில் மோதி சுழன்று அடித்த பின்னரும் எமது வாகனத்திற்கு பின்னால் வந்த மற்றுமொரு வாகனமும்கூட அதேபோன்று மோதி மிக மோசமாக சேதமடைந்திருந்தது.
இவ்விபத்தில் தெய்வாதீனமாக எமது வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இடம்பெறவில்லை.
ஆனால், விபத்திற்குள்ளாகிய இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகி இருக்கின்றன. ஒரு இடத்தில் சிறிய இடவேளையில் இரு வாகனங்கள் சறுக்கிய காரணத்தினால் அந்த இடத்தில் ஏதாவது இருந்திருக்கின்றது என்பதை சந்தேகிக்கத் தோன்றுகின்றது என்றார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்து கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment