(செ.தேன்மொழி)
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்று சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் 1.82 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதுடன், இலங்கையில் ஐநூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த காலங்களில் நாட்டில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்த போதிலும், மீண்டும் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எவ்வளவுதான் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அப்போதே வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். தற்போது தடுப்பூசிகள் எடுத்து வரப்படுகின்றன. அதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க முடியும்.
இந்நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமும் இடம்பெறவுள்ளது. பண்டிகை தினத்தை கொண்டாட வேண்டாம் என்று மக்களுக்கு தெரிவிக்க எம்மால் முடியாது. எனினும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் வகையிலேயே கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும். இதன்போது மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment