62 வயது பெண்மணிக்கு நீண்ட நேரம் ஐசியூ படுக்கை கிடைக்காமல், சிகிச்சை இன்றி உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஒக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன.
இன்று (27) சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் 62 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்மணியின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் உள்ள சரிதா விஹார் என்ற இடத்தில் அப்பல்லோ மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இன்று அதிகாலை கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த 62 வயது பெண்மணி ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஐசியூ படுக்கை கிடைக்கவில்லை.
அதிகாலை அழைத்து வந்த அவருக்கு காலை நீண்ட நேரமாகியும் படுக்கை கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண்மணி உயிரிழந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண்மணியின் உறவினர்கள் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை தாக்கியதுடன், மருத்துவமனையையும் சேதப்படுத்தியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை ‘‘அந்த பெண் விடியற்காலை மிகவும் மோசமான நிலையில் அழைத்து வரப்பட்டார். வைத்தியர்கள் உடனடியாக அவருக்கான சிகிச்சையை மேற்கொண்டனர். போதுமான ஐசியூ படுக்கை இல்லாததால், வசதியுள்ள மாற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலோசனை வழங்கினோம். துரதிருஷ்டவசமாக அந்த பெண்மணி உயிரிழந்து விட்டார்.
நோயாளி உயிரிழந்ததற்கு மருத்துவமனை ஆழந்த இரங்கலை தெரிவித்த நிலையிலும், மருத்துவமனை தாக்குப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது ’’ என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment