(எம்.மனோசித்ரா)
அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்து 5,000 ரூபாய் போலி நாணயத் தாளை வழங்கிய இரு சந்தேகநபர்கள் களனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அண்மையில் போலி நாணயத் தாள்களை உபயோகித்தல் மற்றும் அச்சிடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் பல பதிவாகியுள்ளன.
இவ்வாறு 5,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் அச்சிடப்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே நேரடி பண பறிமாற்றத்தின்போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
உண்மையான நாணயத்தாள் எனக் கண்டறிவதற்கான அனைத்து அடையாளங்களையும் பரிசோதித்து பிரிதொருவரிடமிருந்து அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக விற்பனை நிலையங்கள் மற்றும் சந்தை உரிமையாளர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment