பதுளை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர், சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ள நிலையில் குறித்த மரணத்துடன் பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று மாத காலத்தில் பதுளையில் மூன்று பேரும், தியத்தலாவையில் மூன்று பேரும், வெலிமடையில் இருவரும், பண்டாரவளையில் ஒருவருமாக ஒன்பது பேர், கோவிட்19 தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
பதுளை அரசினர் வைத்தியசாலையில் நேற்று இரவு மரணமானவர், வெலிமடைப் பகுதியின் மீராவத்தை என்ற இடத்தைச் சேர்ந்த 83 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுக்குள்ளான குறித்த நபர், வெலிமடை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்கென பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பயனின்றி மரணமானார்.
அவரது சடலம், கோவிட் 19 சுகாதார வழிமுறைகளுக்கமைய பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment