சீனாவுடனான போட்டித் தன்மையில் இந்தியா இலங்கைக்கு எதிராக செயற்படக் கூடாது - ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் நுணுக்கமான முறையில் கையாள வேண்டும் : பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

சீனாவுடனான போட்டித் தன்மையில் இந்தியா இலங்கைக்கு எதிராக செயற்படக் கூடாது - ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் நுணுக்கமான முறையில் கையாள வேண்டும் : பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித் தன்மையை இந்தியா ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக வெளிப்படுத்தக் கூடாது. ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படும் என இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது. அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டித் தன்மைக்கு இலங்கை பலியாகக் கூடாது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை இடம்பெறவுள்ள கூட்டத் தொடர் தீர்மானமிக்கதாக அமையும். ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்வித பிரேரணைகளையும் பிற நாடுகளினால் செயற்படுத்த முடியாது. 

ஆகவே ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் நுணுக்கமான முறையில் கையாள வேண்டும். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியமாகும். 

ஜெனிவா விவகாரத்தில நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்து சர்வதேசத்தை பகைத்துக் கொள்ளாமல் செயற்படுவது அவசியமாகும் என அரசாங்கத்துக்கு லங்கா சமசமாஜ கட்சி ரீதியில் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பில் சற்று தளம்பல் நிலை காணப்படுகிறது. 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான முரண்பாட்டை இந்தியா இலங்கைக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. இந்தியா தற்போது அமெரிக்காவின் கொள்கையினை ஈர்த்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது

ஒருபுறம் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் முரண்பாடு மறுபுறம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் முரண்பாடு இந்த மூன்று நாடுகளும் இலங்கையினை ஜெனிவா விவகாரத்தில் நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது. சீனா இலங்கைக்கு எதிராக தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்ற உறுதிப்பாட்டை அமெரிக்காவும், இந்தியாவும் விரும்பவில்லை.

பலம் கொண்ட இந்த மூன்று நாடுகளும் இலங்கையின் தேசிய வளங்களை ஏதாவது ஒரு வழியில் கைப்பற்ற ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்துள்ளன. 

எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பிலான முரண்பாடு தற்போது தீர்வுப் பெற்றுள்ளது. தற்போது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் விவகாரம் தலைத்தூக்கியுள்ளது. தனிப்பட்ட நோக்கத்திற்காகவே கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக பல்வேறு தரப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அதானி நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது என இந்தியா குறிப்பிட்டுள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். கிழக்கு முனையத்தை தேசிய முதலீட்டுடன் அபிவிருத்தி செய்ய முடியும் எனின் ஏன் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்.

No comments:

Post a Comment