அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்போக நெற்செய்கை அறுவடையின் பின்னர் நெற்செய்கை காணிகளில் காணப்படும் வைக்கோலை எரிக்க வேண்டாமென, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான வயல் வெளிகளில் அறுவடையின் பின்னர் மீதமாய் கிடைக்கக் கூடிய வைக்கோலை எரிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் மற்றும் வைக்கோலை நிலத்தில் இடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் தொடர்பாக விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் ரீதியாக விழிப்புணர்வு மற்றும் பொது அறிவித்தல் மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் வைக்கோலை எரிப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு வைக்கோலை எரிக்காமல் வயலில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து மண்ணுடன் கலந்து சேதனப் பசளையாக பயன்படுத்தினால் கூடுதலான விளைச்சலைப் பெற முடியுமென அறிவித்துள்ளார்.
வைக்கோலை மண்ணுடன் சேர்ப்பதன் மூலம் மண்ணின் இரசாயன இயல்புகள், மண்ணின் பௌதீக இயல்புகள், உயிரியல் தன்மைகள் என்பன விருத்தியடைகின்றன.
(ஒலுவில் விசேட நிருபர்)
No comments:
Post a Comment