மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டார் அரவிந்தகுமார் எம்.பி. - 64 உறுப்பினர்கள் கலந்துகொண்ட மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டார் அரவிந்தகுமார் எம்.பி. - 64 உறுப்பினர்கள் கலந்துகொண்ட மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடைபெற்ற (19) மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (19) மலையக மக்கள் முன்னணியின் ஹட்டனில் அமைந்துள்ள பிரதான காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டமானது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவில் மொத்தமாக 82 உறுப்பினர்கள் அங்கம் வகித்த பொழுதிலும் 64 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தீர்மானம்
01. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கட்சியின் கொள்கையை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை கட்சியின் கொள்கையை மீறும் செயலாக கருதப்பட்டது.

02. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவ்விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்ற கவுன்சில் தீர்மானத்தை மத்திய குழு ஏற்றுக் கொண்டது.

03. அ. அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியில் வகித்த பதவிகள் மற்றும் அங்கத்துவ உறுப்புரிமை என்பன இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் தலைமைக் காரியாலயத்திற்கு அத்துமீறி அலுவலக பணியில் ஈடுபட்டமை மத்திய குழு மற்றும் கவுன்சிலின் தீர்மானத்தை மீறியதாக மத்திய குழு தீர்மானித்தது.

04. இதன் அடிப்படையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி உறுப்புரிமையிலிருந்தும், மற்றும் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியில் வகித்த பதவிகள் உடன் நடைமுறைப்படுத்தும் வகையில் நீக்கப்பட்டதாக மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தீர்மானங்கள மேற்கொள்ளப்பட்ட பொழுது பதுளையை பிரதிநிதித்துவம் செய்கின்ற 9 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறிய நிலையில் ஏனைய அனைவருடைய ஏகோபித்த ஆதரவுடன் மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஊடக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக நிருபர் தியாகு

No comments:

Post a Comment