(இராஜதுரை ஹஷான்)
இஸ்லாமிய நவீன தீவிரவாதம் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். நவீன தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களே ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை முன்னெடுத்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு எதிர்த்தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அரசியல் நோக்கங்களுக்காக பலவீனப்படுத்தியதன் விளைவாகவே ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது. இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது.
இவ்விடயம் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றில் உரையாற்றிய போது முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி, இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதொன்று கிடையாது என்று குறிப்பிட்டார்கள். அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள இரண்டு அரச தலைவர்களும் இவரது கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.
நாட்டில் பாரம்பரிய இஸ்லாமிய அடிப்படைவாதம், நவீன இஸ்லாமிய அடிப்படைவாதம் என இரு பிரிவுகள் காணப்படுகின்றன.
நவீன இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புடையவர்கள். உலகளாவிய ரீதியில் பிரசித்துப் பெற்ற கற்கை நெறிகளை பின்பற்றியுள்ளார்கள்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையும் நவீன இஸ்லாமிய அடிப்படைவாதிகளே நடத்தினார்கள். ஆகவே நவீன அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை கொண்டு அரசாங்கத்தை எவராலும் பலவீனப்படுத்த முடியாது. விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தேர்தல் பிரசாரமாக்கி பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றவில்லை என்றார்.
No comments:
Post a Comment