ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில் சமூகத்திற்கு வெற்றி கிடைக்குமெனவும் இறைவனின் துணையினால் நல்ல முடிவு விரைவில் கிடைக்குமெனவும் தான் உறுதியாக நம்புவதாக தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில் பிரதமர் பாராளுமன்றத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கேட்டதற்கு அவர் இந்தக் கருத்தை புதன்கிழமை 17.02.2021 ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர் வெட்டிப் பேச்சுக்கள் மூலம் எதுவுமே நடைபெறப் போவதில்லை. அத்துடன் வீணர்களின் விமர்சனங்களுக்கும் தூற்றல்களுக்கும் பயந்து நாட்டில் வெறுப்பு அரசியலை வெறுத்தொதுக்கும் தனது இந்தப்பணியை நிறுத்தப் போவதுமில்லை." எனவும் அவர் சூளுரைத்தார்.
அரசாங்கத்துடன் முஸ்லிம்களின் விவகாரங்களை எவ்வாறு கையாள வேண்டுமென அரசியல் சூட்சுமம் தெரியாதவர்களே பொதுவெளியில் வீண் குழப்பங்களை உருவாக்குகின்றனர்.
எம்மைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியான நகர்வுகளை மேற்கொண்டு இந்த விடயத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.
ஜனாஸாக்களை அடக்கும் விடயத்தில் எமது அரசியல் காய்நகர்த்தல்களை நாம் நிறுத்தப் போவதில்லை. அத்துடன் வீண்பழி சுமத்துபவர்களின் வாய்களும் விரைவில் அடங்கும் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
No comments:
Post a Comment