(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மாத்திரமே இருப்பதனாலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு முஸ்லிம் மக்களும் விசேட நிபுணர்களும் சிவில் மற்றும் அரசியல் குழுக்களும் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது.
எனினும் இப்போது ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு மூன்று வாரங்கள் மாத்திரமே இருக்கும் நிலையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறெனின் இதுவரை காலமும் தமது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு இந்த அரசாங்கம் எத்தனை பெரிய வலியைக் கொடுத்திருக்கிறது? இது மிக மோசமான செயற்பாடு. இது மிக மோசமான அரசாங்கம் என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment