பாராளுமன்றத்தில் செய்ய முடியாததை அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் செய்யப் போகிறார்களாம், அரசியலுக்காக மக்களை ஏமாற்ற நான் தயாரில்லை - அங்கஜன் இராமநாதன் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 21, 2021

பாராளுமன்றத்தில் செய்ய முடியாததை அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் செய்யப் போகிறார்களாம், அரசியலுக்காக மக்களை ஏமாற்ற நான் தயாரில்லை - அங்கஜன் இராமநாதன்

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் தனியான விவாதத்தை கோர முடியாதவர்கள் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்களில் வந்து தீர்மானம் எடுக்குமாறு குழப்பம் விளைவிப்பது தமது குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அங்கஜன் எம்.பி துணை போகின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கடந்த வாரம் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்து தொடர்பில் பதிளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நானும் மீள்குடியேற்ற பிரதேசத்தை சேர்ந்தவன். அந்த வகையில் மக்களின் வலியை என்னால் நன்கு உணர முடியும். நான் அரசாங்கத்தின் முகவர் அல்ல. என்றும் எம்மக்களின் முகவராக மக்களின் பிரச்சனைகளை அரசில் பிரதிபலிப்பவனாகவே அரசாங்கத்துடன் உள்ளேன்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு தொடர்பில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றேன் என மக்களால் தோற்கடிக்கப்பட்ட சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தவறான ஒரு கருத்தை கொண்டு சேர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணியை அவர்களின் சம்மதம் இன்றி சுவீகரிப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாததோடு குறித்த நிலைப்பாடு தொடர்பில் கடந்த மாதம் வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தெளிவாக தீர்மானம் எடுத்திருந்தேன் என்பது யாவரும் அறிந்ததே.

இவ் அபிவிருத்தி குழுக் கூட்டம் என்பது அரசாங்கத்தினால் மக்களுக்காக வழங்கப்பட்ட திட்டங்களை தடைகளின்றி நடைமுறைப்படுத்த வழியமைத்தல் மற்றும் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடாகவே குறித்த கலந்துரையாடலின் நோக்கம் காணப்படுகின்றது.

காணி சுவீகரிப்பு தொடர்பில் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களால் எதுவும் பெரிதாக நடந்துவிடப்போவது இல்லை என்பது தீர்மானங்களை எடுங்கள் என குழப்பம் விளைவிப்பவர்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் அபிவிருத்தி குழுக்கூட்டங்களை வலுவிழக்க செய்வதே அவர்களின் உள்நோக்காகும்.

பாராளுமன்றத்தில் எதை எதையோ பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் தமிழ் தேசியவாதிகள் என தம்மை அடையாளப்படுத்தி கொள்வோரால் ஏன்? பாராளுமன்றத்தில் யாழ் மாவட்ட காணி சுவீகரிப்பு தொடர்பில் தனியான ஓர் விவாதத்தை இதுவரை நடாத்த கோரவில்லை?அதைவிட பல சட்ட மாமேதைகள் வெறுமனே வீதியிலிறங்கி போராடுவதை விடுத்து நீதிமன்றங்களூடாக இம் மக்களுக்கு சட்ட ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்காலாமே.

நான் கடந்த பாராளுமன்ற தேர்தலிற்கு முன்னர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே தமிழ் மக்களுக்கு கடந்தகாலங்களில் சேவையாற்றினேன். அதன் பெறுபேறாகவே மக்கள் என்னை தமது நேரடி பிரதிநிதியாக அதிகூடிய விருப்பு வாக்குகளின் அடிப்படையில் என்னை பாராளுமன்றம் அனுப்பிவைத்தார்கள்.

என்னை விமர்சிக்கும் இருவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஒருவர் 2004 காலப்பகுதியில் ஒரு லட்சத்திற்கு மேலாக விருப்பு வாக்குக்கள் பெற்று பாராளுமன்றம் சென்று தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று பாராளுமன்ற தேர்தலில்களில் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்.

கடந்த 2020ல் நடைபெற்ற பொது தேர்தலில் 2004 இல் பெற்ற விருப்பு வாக்குகளின் வெறும் கால்வாசி வாக்குகளே கிடைத்த நிலையில் கட்சிக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் ஊடக பாராளுமன்றம் சென்று தனது இருப்பை தக்க வைத்து கொள்ளவதற்கு தமிழ் மக்களை தவறாக வழி நடாத்த முற்படுகின்றனர்.

ஆகவே எனக்கு எம் மக்களுடைய வேதனைகள் அவர்களின் எதிர்பார்ப்புகள் நன்கு புரிகின்ற நிலையில் போலி தேசியம் பேசி நடைமுறைக்கு சாத்தியமற்ற தீர்மானங்களை வெறுமனே தீர்மானங்களை மட்டும் அடுக்கி விட நான் தயாரில்லை என்பதோடு மக்களுக்கு என்னால் செய்ய கூடியவற்றை சொல்லிலும் செயலிலும் வெளிப்படையாக செய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment