ஏ.எச்.ஏ. ஹுஸைன்
முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் அபிலாஷைகளைச் சவாலுக்கு உட்படுத்தும் விடயங்கள் பற்றி ராஜிதவுக்குத் தெரியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மதத்தையும் சமூகத்தையும் அடகு வைத்துவிட்டுத்தான் அரசியலமைப்பு 20ஆவது திருத்தத்திற்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவளித்ததாக, ராஜித சேனாரத்ன எம்,பி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நஸீர் அஹமட் இதனைத் தெரிவித்தார்.
ராஜித சேனாரத்ன எம்பி தெரிவித்த கருத்துக்களை நிராகரித்த நஸீர் அஹமட் கடந்த காலங்களில் ராஜித சேனாரத்ன ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் இவ்வாறான ஊடாட்டங்களை நடாத்திய பழக்க தோசத்திலேயே தற்போதும் இந்த கருத்தை முன்வைத்தள்ளார்.
இலகுவில் சோரம்போகும் மற்றும் பணத்துக்கு அடிமையாகும் எளிய அரசியல்வாதிக்கு ராஜித சேனாரத்ன சிறந்த உதாரணம். அவரது இந்த எளிய சிந்தனைகளில்தான் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்பிக்களையும் பார்க்கின்றார்.
முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை வெல்ல வேண்டிய வியூகங்களையே நாம் செய்து வருகிறோம்.
வியாபாரம் என்பது எமது பரம்பரைச் சொத்து. இதை அரசியலுக்குள் புகுத்தும் எந்தத் தேவையும் எமக்கில்லை. ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அரச சேவைகளும் வியாபார நோக்கில் இருந்ததை இந்த நாடே அறியும்.
வெள்ளை வேன் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி அசிங்க அரசியல் செய்த இவரை மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை. இல்லாததைப் பேசியும் கற்பனைக் காரணங்கள் கூறியும் எமது சமூக அடைவு மற்றும் இலட்சியத்திலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது.
வருமானத்தை எதிர்பார்த்து ராஜபக்க்ஷக்களை விமர்சிக்கும் ராஜிதவுக்கு சமயங்களின் அறிவு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் மதத்தை பண்டப் பொருளாக இவர் கருதுகிறார் போலுள்ளது.
மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை கொச்சைப்படுத்தப்படுவதை இல்லாதொழிப்பதே, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்போன்ற எம்பிக்களின் தேவை. அதற்கான வியூகங்களில்தான் 20ஆவது திருத்தம் பற்றிச் சிந்தித்து முடிவேடுத்தோம்.” என்றாரவர்.
No comments:
Post a Comment