"வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஒத்துழையுங்கள்" - கும்பிட்டுக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் சுதர்ஷனி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

"வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஒத்துழையுங்கள்" - கும்பிட்டுக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் சுதர்ஷனி

தேவையேற்பட்டால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த நேரலாம் என ஆரம்ப சுகாதார, கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் தொற்று நோய் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குமாறு தான் இரு கரம் கூப்பி மக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சானது இதுவரை மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளில் மக்களின் பூரண ஆதரவு கிடைத்துள்ளதென தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் அந்த ஒத்துழைப்பை பெற்றுத் தருமாறும் நாட்டு மக்களிடம் கும்பிட்டுக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இனங்காணப்பட்ட புதிய வகை வைரஸ் தற்போது 80 நாடுகளில் பரவியுள்ள நிலையில் எமது நாட்டில் கொழும்பு, அவிசாவளை, பியகம போன்ற பகுதிகளில் புதிய வகை வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர்.

அவிசாவளையிலிருந்தும் ஹங்வெல்ல பிரதேசத்திலிருந்தும் இனம் காணப்பட்டுள்ளவர்களுக்கு புதிய வகை வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது பற்றி தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றது.

மேற்படி வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியது என்பதுடன் ஒரு தொற்றாளரிலிருந்து பெரும்பாலானோருக்குத் தொற்ற கூடியதென்றும் தெரிவித்துள்ள அமைச்சர் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது மிக அவசியமானதென்றும் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment