(எம்.மனோசித்ரா)
போதகர்கள் எனக் கூறி போலி பிரசாரங்களை செய்வதோடு, துன்பத்திலிருந்தும் மக்களின் கவலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கத்தோலிக்க மதத்தை இழிவுபடுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத குழுவினர் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு - பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முறையாக பயிற்சிகள் எதனையும் பெறாமல் தம்மை போதகர்கள் என்று கூறி மக்கள் மத்தியில் போலியான பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
இவ்வாறானவர்கள் துன்பத்திலுள்ள மக்களின் கஷ்டங்களை போக்குவதாகக் கூறி அவர்களை ஏமாற்றுபவர்களாவர். குறுக்கு வழியில் கஷ்டங்களிலிருந்து மீள முடியும் என்று கத்தோலிக்க சமயத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
எனவே இவ்வாறானவர்கள் யார், அவர்களுக்கு தலைமை வகிப்பவர்கள் யார், வெளிநாடுகளில் எவ்வாறான அமைப்புக்களுடன் இவர்கள் தொடர்பு கொண்டுள்ளார்கள் ?, எங்கிருந்து இவர்களுக்கு நிதி கிடைக்கிறது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயுமாறு அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். துன்பத்திலுள்ள மக்களை ஏமாற்றி பிழைக்கும் இவ்வாறானவர்களால் கத்தோலிக்க மதத்திற்கு இழுக்கு ஏற்படுகிறது.
கத்தோலிக்கர்கள் என்று கூறும் இவ்வாறான அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு துணை போகாமல் அவர்களுக்கு ஏமாறாமல் இருக்குமாறும், தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறினாலும் அவர்கள் கத்தோலிக்கத்திற்குள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறும் கத்தோலிக்க மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment