14 மில்லியன் மக்களுக்கு விரைவாக தடுப்பூசிகளை வழங்கி அரசாங்கம் திட்டமிட்ட இலக்கை நிறைவுசெய்து தடுப்பூசி ஏற்றுவதில் முன்னணியில் திகழும் நாடாக உருவாகுவதே அரசாங்கத்தின் அபிலாசையாகும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நாட்டில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய மக்களின் எண்ணிக்கை 14 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு துரிதமாக தடுப்பூசி ஏற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எவரும் கொரோனா தடுப்பூசி தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. தடுப்பூசி ஏற்றும் பணி திட்டமிட்ட வகையில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறுகிய காலத்திற்குள் இதனை நிறைவு செய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதுடன் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தடுப்பூசி எற்றப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் இலங்கையிலும் உலக நாடுகளிலும் விசேட வைத்தியர்களின் நிலைப்பாடு எதிர்ப்பு சக்தி செயற்பாடுகளில் 3 மாத காலத்திற்குள் இரண்டாவது தடுப்பூசி வழங்குவதன் ஊடாக எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதாகும்.
இதே நிலைப்பாட்டை இலங்கை விசேட வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் மொத்த சனத் தொகையில் ஒரு கோடி 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுவது இலக்காகும். 28 மில்லியன் கொவெக்ஸ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இதன் செயற்பாடுகள் திருப்தியில்லை என்று குறைகூறினர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment