மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை, வெள்ளம் - கிராமங்களுக்குள்ளேயே போக்கு வரத்து செய்ய முடியாத நிலையில் மக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை, வெள்ளம் - கிராமங்களுக்குள்ளேயே போக்கு வரத்து செய்ய முடியாத நிலையில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக கிராமங்களின் உள் வீதிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதனால் மக்கள் கிராமங்களுக்குள்ளேயே போக்கு வரத்து செய்ய முடியாத அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மண்முனை தென் எருவில்பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனைப் பற்று, மட்டக்களப்பு நகர், ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகர், கிரான், வாழைச்சேனை, மற்றும் வாகரை உள்ளிட்ட பல பிரதேசங்களிலுமுள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குப் பெயர்போன தேத்தாதீவு, மாங்காடு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, உள்ளிட்ட பல கிராமங்களில் செய்கை பண்ணப்பட்டிருந்த மிளகாய், கத்தரி, வெண்டி, பீர்க்கு, புடோல், பீற்றூட், பயற்றை மற்றும் வெற்றிலை உள்ளிட்ட பல பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிவாழ் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட எருவில், களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேத்தாதீவு, உள்ளிட்ட பல கிராமங்களின் வீடுகளுக்குள் நள்ளிரவிலேயே வெள்ள நீர் உட்புகுவதனால் அம்மக்கள் இரவில் தூக்கமின்றி கண்விழித்திருந்ததோடு, உடமைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. 

எனினும், கிராம சேவையாளர்கள் உள்ளிட்ட பலர் கிராம மக்களுடன் ஒன்றிணைந்து வெள்ள நீரை வெட்டி வெளியேற்றும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு முகத்துவாரம் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள இந்நிலையில் மட்டக்களப்பு வாவியில் விழும் வெள்ள நீர் மிகவும் வேகமாக வடிந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில், மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரி, உன்னிச்சை, உறுகாமம், வெலிக்காகண்டிய, கித்துள்வெவ, வாகனேரி, கட்டுமுறிவு, வடமுனை, புணாணை, உள்ளிட்ட பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்தோடு, மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. 

அதபோல் களுதாவளை, களுவாஞ்சிடி, மகிழூர், குருமண்வெளி, பெரிய போரதீவு, பழுகாமம், கோவில் போரதீவு, வெல்லாவெளி உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பி வளிவதையும் காணமுடிகின்றது.

இது இவ்வாறு அமைகின்ற போதிலும் திங்கட்கிழமை காலை 8.30 மணி வரைக்கும் கடந்த 24 மணித்தியாலத்தில் 91.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சுப்ரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment