மாவனல்லை, ஹிங்குல, மொல்லிகொட பிரதேசத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் வெடி பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வருக்கும் இம்மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று (02) மாவனல்லை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் குறித்த உத்தரவை வழங்கியிருந்தார்.
கடந்த டிசம்பர் 22ஆஅம் திகதி குறித்த கல்குவாரியிலிருந்து, அமோனியா நைட்ரேட் வகை 15 கிலோ கிராம் வெடிமருந்து, வோட்டர் ஜெல் 6, சேவை நூல் 35, டெட்டனேட்டர் 20, கல் உடைக்கும் பீம் 5 ஆகிய பொருட்கள் களவாடப்பட்டதாக, அதன் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில், ஒருவர் கைது செய்யப்பட்டு CIDயிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம், தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்வதற்கான திட்டம் என பல்வேறு கட்டுக்கதைகளை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டிருந்தன,
ஆயினும் குறித்த சம்பவம் பயங்கரவாத அல்லது தீவிரவாத செயல் அல்ல எனத் தெரிய வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG அஜித் ரோஹண தெரிவித்திருந்ததோடு, இது ஒரு ஊழியர் செய்த திருட்டுச் சம்பவம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment