(ஆர்.யசி)
பிரதமரின் மேலதிக செயலாளரும், பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி பிரதம கொரடாவின் செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரட்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பாராளுமன்றத்திலுள்ள ஆளும் கட்சி பிரதம கொரடாவின் அலுவலகமும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சேவை அலுவலகமும் மூடப்பட்டுள்ளதுடன் அலுவலக பணியாளர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் பாராளுமன்றத்துடன் தொடர்புபட்டிருந்த பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே பாராளுமன்ற அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்க பணிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே வெள்ளிக்கிழமை பாராளுமன்ற பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் செயலாளருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து பாராளுமன்றத்திலுள்ள ஆளும் கட்சி பிரதம கொரடாவின் அலுவலகமும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சேவை அலுவலகமும் மூடப்பட்டுள்ளதுடன், அலுவலக பணியாளர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் வகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகளை 19, 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள போதும், 18 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் அது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதன்படி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி அதன் பின்னரான நாட்களில் அமர்வுகளை நடத்தாது பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment