மட்டக்களப்பில் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஏறாவூர், செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரை நேற்று (03.01.2021) இரவு 3 இலட்சம் ரூபா பெறுமதியான 11 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மட்டக்களப்பு நகரில் வைத்து கைது செய்துள்ளதுடன் இரு முச்சக்கர வண்டிகளையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார தெரிவித்தார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏறாவூரைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரியிடம் தொடர்பு கொண்டு போதைப் பொருள் வாங்குவது போல நடித்து அவரை மட்டக்களப்பு திருகோணமலை வீதிக்கு வரவழைத்தனர். இதன்போது முச்சக்கர வண்டி சாரதியை மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்து போதைப் பொருளையும் மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர் வழங்கிய தகவலுக்கமைய ஏறாவூரைச் சோந்த இன்னுமொருவரை போதைப் பொருள் வாங்க வேண்டும் என அவரையும் வரவழைத்து மடக்கிப்பிடித்தது கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.
அதில் கைது செய்யப்பட்ட இருவரும் ஏறாவூர் மிச்சுநகர், செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் எனவும் நீணட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருபர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment